@swissnews7.com: ஸ்பெயின் எல்லைகளை உடைத்துச் சுனாமியாய்ப் பாயும் அகதிகள் வெள்ளம் - கொந்தளிக்கும் ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழையும் நுழைவாயிலாகக் கருதப்படும் ஸ்பெயின் நாட்டின் எல்லைகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மாபெரும் அகதிகள் வருகை நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மொராக்கோவிலிருந்து (Maroc) ஆயிரக்கணக்கான குடியேறிகள் சியூட்டா (Ceuta) மற்றும் மெலில்லா (Melilla) நிலப்பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைந்துள்ள நிகழ்வு, ஒட்டுமொத்த ஐரோப்பிய அரசியலிலும் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவில் மொராக்கோவிலிருந்து சியூட்டா எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான குடியேறிகள் கடல் மார்க்கமாகவும் தரைவழியாகவும் சாரை சாரையாகப் படையெடுத்தனர். இதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்பெயின் காவல்துறையினர் திணறினர். இருளில் நீந்தி எல்லையைக் கடக்க முயன்ற இந்த ஆபத்தான பயணத்தில் குறைந்தது 18 பேர் கடலில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது ஒரு "முழுமையான மனிதாபிமான அவசரநிலை" என அறிவிக்கப்பட்டுள்ளது. சியூட்டாவைத் தொடர்ந்து, மெலில்லா (Melilla) நகரிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அங்கு நேற்று வியாழக்கிழமை இரவு சுமார் 400 ஆவணமற்ற குடியேறிகள் இரண்டு தரைவழி எல்லைச் சாவடிகள் மற்றும் தெற்கு அணைக்கட்டு (Digue sud) வழியாக ஊடுருவியுள்ளனர். ஜூன் மாதத் தொடக்கத்தில் 83 ஆக இருந்த துணையற்ற சிறார்களின் எண்ணிக்கை , தற்போது 190 ஆக உயர்ந்துள்ளது என மெலில்லா நகரத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்