@ramanan60: பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பிரதான நுழைவாயில் திறப்பு விழா கிழக்கில் வரலாற்று பிரசித்திபெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பிரதான நுழைவாயில் திறப்புவிழா ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பரிபாலனசபை மற்றும் திரௌபதியம்மன் ஆலய பிரதான நுழைவாயில் திருப்பணி மன்றம் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. சிவஸ்ரீ மயூரவதனக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற பிரதான விசேட பூசை வழிபாடுகளில் திரௌபதியம்மன் ஆலய பூசகர்கள், ஐவர் கொலுவினர், பாண்டிருப்பு, கல்முனை பிரதேசங்களிலுள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர்,இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். மகா பாரதக் கதையினை நினைவு கூறும் வகையில் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 18 தினங்கள் நடைபெறுகிறது. பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் இற்றைக்கு 600 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயமாகும். வட இந்தியாவில் இருந்து வருகை தந்த தாதன்மா முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதி செவ்வாய் கிழமை திருக்கதவு திறத்தலுடன், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறும் பாற்பள்ளயம் உற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.